நம் தேசத்தில் வருட ஆரம்பம்  எனகூறுவது  பழக்கத்தில்  இல்லை.  வருடம் பிறந்தது, மாதம் பிறந்தது என கூறுவதுதான்  பழக்கம்.  பிறந்தால்தானே பெயர் வைப்போம்,  நம்தேசத்தில் வருடங்களும், மாதங்களும், நாட்களும் பெயர்களுடனேயே பிறந்திருக்கின்றன.  அதே பெயர்கள்  வருடாவருடம்  திரும்பத்திரும்ப   வந்துகொண்டிருக்கும். அறுபது வருடங்கள், பன்னிரெண்டு மாதங்கள், ஏழு, நாட்களும் அப்படியேதான். மனித பிள்ளைகள், குட்டிகள் பிறந்து  கொஞ்சநாட்கள் கழித்து பெயர்வைப்பது  என்றதொரு பழக்கம் உள்ளது.  பிறக்குமுன் என்ன பெயர் வைக்கவேண்டுமென  முடிவு எடுக்கும்  பழக்கம் நமக்கு கிடையாது. வெகு காலம் முன்பு  பரிபூரண ஆயுள் வாழ்ந்து மறைந்தவர்களின் பெயர் வைப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பார்கள். பெற்றோருக்கு வேறு பெயர் வைத்துக்கூப்பிட மனதிருந்தாலும் மறுக்க மாட்டார்கள், வீட்டுப்பெரியவர்கள். அவரவர் மனம் போல் நடக்கட்டுமென  நினைத்து  ஒத்துக்கொண்டு  விடுவார்கள்.

இன்றைய இளைய மனிதர்களும், வாய்கிழிய பேசுவார்களே தவிர, பெரியவர்களின் பேச்சை  தட்டிவிட்டு  போவது குறைவாகத்தான்  காணப்படுகிறது. இளைய மனிதர்களுக்கும்  பெரியோர்கள் பேச்சை  தட்டக்கூடாது  என்ற  ஒருவித  மரியாதையும்  பயமும்தான் காரணம்.  மேலும் நம்மைவிட பெரியவர்களுக்கு அனுபவம் அதிகமென்பதில் இந்த  தலைமுறையினருக்கும்  நம்பிக்கை அதிகம்.  பெரியவர்களின் ஆசிகள்தேவை என்ற எண்ணங்கள்  வேறு  உள்ளதும்  மறு காரணம்.  எதையும் ஆரம்பிக்கும்  முன் பெரியவர்களை  கேட்டு நாள் , நட்சத்திரம் கேட்டு பார்த்து ஆரம்பிப்பார்கள். எல்லாமே யாவருக்கும் நல்லபடியாக நடக்கவேண்டுமே என்ற கவலை யாவரையும் படுத்திவைக்கிறது. ஆனால் வயதான, மனமுதிர்ச்சியடைந்தவர்களின்  பேச்சைக்கேட்டு நடக்க மட்டும் இஷ்டமில்லை.  ஒருபக்கம் கவலை, மற்றொருபக்கம் தான்தோன்றித்தனம்  தென்படுவதால் மக்கள் அடையும் கடினமான நேரத்திற்கு  அளவேகிடையாது. ஆனாலும், குப்புற வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை  என்பது போல் வீம்பாக பேசுவதுதான் மிச்சம்.

வருடப்பிறப்பன்று புளிப்பு வகைக்கு மாங்காய்பச்சடி, கசப்புவகைக்கு வேப்பம்பூ பச்சடியென்று , செய்து சாப்பிடுவார்கள். சில வீடுகளில் பாயசம் வைத்து சாப்பிட்டு வருடப்பிறப்பை வரவேற்பார்கள்.