காலம் மாறிவிட்டது என மனிதர்கள் அடிக்கடி பேசி கேட்கிறோம் .   எதையும் கட்டிவைத்து காவல் காத்து காப்பாற்றுவது என்பது   கடினமான விஷயமே. உனக்காகவே நான், எனக்காகவே நீ என்று நினைப்பவர்கள் கூட சில நேரத்தில்  தடுமாறி விழுந்து விடுவதை கண்டிருக்கிறோம். ஆகையால் எதையுமே  பேச்சளவில் மட்டுமில்லாமல் மிகவும் கவனமாக  கையாள வேண்டியது மிகவும் அவசியமே.  எத்தகைய கெட்டிக்கார்ர்களாக இருந்த போதிலும்  சமயங்களில் தடுமாறி விடுவது சகஜமே. விழுந்தேன் என நினைக்காமல் தாண்டி வந்தேனென்று நினைத்துக் கொள்ளவேண்டும்.

இந்தக்கால கட்டத்தில்  எவருக்குமே விட்டுக்கொடுக்கும் பழக்கம் எவருக்குமே   பிடிப்பதில்லை . மேலும் ஒருமுறை விட்டுக்கொடுக்க ஆரம்பித்தால் நாம் தாழ்ந்து விடுவது போலாகிவிட்டாற் போல் தோன்றுவதும் ஒரு காரணம். அதே பழக்கமாகவும் ஆக விடக்கூடும். காலங்கள் மாறும்போது காட்சிகளும் மாறிவருகின்றன என்பதையும் காண்கிறோம். இன்றையநாளில் ஆணோ பெண்ணோ தன்னிஷ்டம் போலவே எதுவும் நடக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதும் அதிகமாகி வருகிறதையும் காண்கிறோம். இந்தமாதிரியான சந்தர்ப்பங்களில்  பிடிவாதத்தை  நிறைவேற்றிக்கொள்ளும் திறமை என  ஒரு சிலர் நினைக்கலாம்.  நிறைவேற்றிக்கொண்டாலும் யாவரும் மனமொத்தபடி நடந்து கொண்டால் மட்டுமே  மனசாந்தியுடன்  வாழ வழி கிடைக்கலாம்.

ஆணோபெண்ணோ எவராவது தணிந்து நடந்து கொண்டால் அது அவர்களுடைய பலத்தையே காண்பிக்கிறது. ஏனென்றால்  மனக்கட்டுப்பாடு என்பது  மிகவும் அத்யாவசியமான ஒன்று. எல்லோருமே கடைபிடிக்கவேண்டிய  விஷயமாகத்தோன்றினாலும் , நாமொன்று நினைக்க நடப்பது வேறாகவும் ஆக விடுகிறது. ஆனாலும் தோல்வியை கண்டு கலங்காமல்,  அடுத்த அடிகளை எடுத்துவைத்து முன் வைத்த கால்களை பின் வாங்காமல்  முன்னேற வேண்டும்.  எல்லாமே  நாம் எதிர்பார்த்தது போல் நடக்காவிட்டாலும் மனம் தோல்வியை நினைத்து மறுகினாலும்  உள் மனம் திடமாக இருந்து நம்மை காப்பாற்ற சான்ஸ் உள்ளது.

ஆனால் இன்றைய  நாட்களில் அடாவடி பேச்சுக்களினாலும்,  விஷயங்களை விவரமாக பேசி சுற்றி வளைத்து எதிரில் உள்ளவர்களை குழப்பி விடுவதில் தேர்ந்தவர்களாகவும் இருந்துவருகிறார்கள்.காலங்கள் மாறிவிட்டன அதற்கேற்றாற் போலவே காட்சிகளும் மாறிவிட்டன. எதையும் சமாளித்து விடமுடியும் என நினைப்பவர்களும் மனது கலங்கிவிடுகிறார்கள்.