சபலம்என்பதற்கு சரியான அர்த்தம் அல்ப ஆசைகள் என எடுத்துக்கொள்ளலாம். வாழ்க்கையில் பல இடையூறுகளை பார்த்திருந்தாலும் மனிதமனம் அடங்கினால்  மட்டுமேசரிப்படும். உண்மையிலேயே வாழ்வில் வசதிகள் பெருக, பெருக  இன்னம் வேண்டுமென்ற எண்ணங்கள் அடங்கவில்லை.  தேவைகளை பூர்த்தி செய்து முடிக்கும்நேரத்தில் அடுத்தது, அதற்கும் அடுத்தவைகளின் தேவை என அதிகமாகி வருகிறதே தவிர குறைவதில்லை. உலகத்தின் நியதியே இதுதான். மனித மனம் ஆவல்களை அடக்கிவரும் நேரங்களில், அவைகள் அவசியமாகும் நேரமும் வந்து விடுகிறது. எதை வேண்டுமென்று வைத்துக்கொள்வது, எதை விட்டுத்தள்ளுவது என்பதுமே புரியாமல் ஆகிவிடுகின்றன . முதலில் அவசியத்திற்காக வாங்கியவைகள் இன்றைக்கு அத்யாவசியமாகி விட்டன. முன்பெல்லாம் கைவிசிறிகளை உபயோகத்தில் வைத்துக்கொள்வோம். போன தலைமுறையில் டெசர்ட் கூலர்  என்ற சாதனத்தை பயன்படுத்திக்கொண்டிருந்தோம் . இன்றோ ஏ.சி இல்லாவிடில்  பிறந்த  குழந்தை கூட தூங்காமல் தவிக்கிறது, பெற்றவர்களையும் தவிக்கவைக்கிறது. இப்படியாக இயற்கை  மனிதர்களுக்கு அனுகூலமாக இருப்பதை விரும்பவேயில்லை என்பதும் தெரிகிறது. வேறு வழியில்லாமலும் தவிக்க விட வேண்டி வருகிறது. தனக்கு வசதிகளை பெருக்கிக்கொள்ள முடிகிறதோ,  இல்லையோ வாழ்ந்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் ஆகி விடுகிறது.